மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.63 கோடி கடன் வழங்க இலக்கு

பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.63 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக பண பரிவர்த்தனை பயிலரங்களில் கலெக்டர் கூறினார்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.63 கோடி கடன் வழங்க இலக்கு
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பணமில்லா பரிவர்த்தனை, நிதி உள்ளாக்கம், நிதியியல் கல்வி மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குதல் தொடர்பான ஒரு நாள் பயிலரங்கம் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது.

இந்த பயிலரங்கத்தில் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஆலத்தூர் மற்றும் வேப்பூர் ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த வங்கி மேலாளர்கள், செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

நாட்டின் பொருளாதார முன்னேற்றம் பெண்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளையும், பல்வேறு கடனுதவிகளையும் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கிட ரூ.63 கோடி இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கினை எய்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வங்கிகள் முன்வரவேண்டும். சிறந்த தொழில் முனைவோர்களை கண்டறிந்து அவர்களுக்கு கடனுதவி வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மகளிர் திட்ட அலுவலர் உமாமகேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள்தாசன், உதவித் திட்ட அலுவலர்கள் வெங்கடேசன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் நவீன்குமார் மற்றும் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com