

ஆவடி,
ஆவடியை சேர்ந்த 16 வயது சிறுமி, பூந்தமல்லியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், உறவினரான ஆவடி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 27) என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் சென்னை சென்டிரலில் உள்ள கங்கை அம்மன் கோவிலில் கடந்த 28-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
ஆனால் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத சிறுமி, திருமணத்துக்கு பிறகு அவரது தாய் வீட்டுக்கு வந்திருந்தபோது சைல்டு லைன் 1098-க்கு போன் செய்து தனக்கு விருப்பம் இல்லாமல் கட்டாய திருமணம் செய்து வைத்துவிட்டதாக கூறினார்.
இதுபற்றி பூந்தமல்லி சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் விஜயா கொடுத்த தகவலின் பேரில் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல காப்பக அலுவலர்கள் அந்த சிறுமியை மீட்டு திருநின்றவூர் அருகே உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக சிறுமி கொடுத்த புகாரின்பேரில் ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா சிறுமிக்கு கட்டாய திருமணத்தை செய்து வைத்ததாக சிறுமியின் பெற்றோர், சிறுமியை திருமணம் செய்து கொண்ட ராஜேஷ் மற்றும் அவருடைய பெற்றோர் என 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.