ஏரியில் போதிய நீர் இருப்பு இல்லாததால் வேடந்தாங்கல் சரணாலயம் வந்த வெளிநாட்டு பறவைகள் ஏமாற்றம் கூடுகட்டி குடியேற தயக்கம்

ஏரியில் போதிய நீர் இருப்பு இல்லாததால் வேடந்தாங்கல் சரணாலயம் வந்த வெளிநாட்டு பறவைகள் ஏமாற்றம் அடைந்துள்ளன.
ஏரியில் போதிய நீர் இருப்பு இல்லாததால் வேடந்தாங்கல் சரணாலயம் வந்த வெளிநாட்டு பறவைகள் ஏமாற்றம் கூடுகட்டி குடியேற தயக்கம்
Published on

சென்னை,

தமிழகத்திலேயே பெரிய பறவைகள் சரணாலயம் என்ற சிறப்பை பெற்ற வேடந்தாங்கல் சரணாலயம் சென்னையை அடுத்த காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும் அக்டோபர் மாதம் முதல் இங்கு வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கும்.

கூழைக்கடா, நத்தை கொத்திநாரை, பாம்புத்தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், வர்ண நாரை உள்பட சுமார் 26 வகையான வெளிநாட்டு பறவைகள் இங்கே வந்து செல்லும். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பறவைகள் வந்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 16-ந் தேதி பொதுமக்கள் பார்வைக்காக சரணாலயம் திறக்கப்பட்டது.

1000 பறவைகளே வருகை

ஆனால், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தாமதமாகி வருவதால், இன்னும் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரிக்கவில்லை. வேடந்தாங்கல் ஏரியிலும் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதால், குறைந்த அளவில் வரும் பறவைகளும் ஏமாற்றம் அடைந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சுமார் 1000 வெளிநாட்டு பறவைகளே வந்து தங்கியுள்ளன. இந்தப் பறவைகளும் காலையிலேயே இரை தேட சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏரி, குளங்களுக்கு சென்றுவிட்டு மாலையிலேயே திரும்பி வருவதால், பகல் நேரத்தில் அங்கு எந்தப்பறவையும் இருப்பதில்லை.

சரணாலயம் திறப்பு எப்போது?

இதனால், இந்த ஆண்டு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறப்பு என்பது, வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதுகுறித்து, அங்குள்ள வன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வேடந்தாங்கல் ஏரியில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக அவ்வப்போது மழை பெய்ததால், ஏரியில் ஓரளவு நீர் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு அதுபோன்ற நிலை இல்லாததால், வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து தங்குவதற்கு யோசிக்கின்றன. குறைந்த அளவு பறவைகள் இரவு நேரத்தில் வந்து தங்கினாலும் பகல் நேரத்தில் அவைகள் இருப்பதில்லை. இரைதேடி வெளியே சென்றுவிடுகின்றன. இதனால், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை பொதுமக்கள் பார்வைக்காக திறக்க முடியாத நிலை இருக்கிறது. இனி மழை பெய்து ஏரியில் தண்ணீர் அதிகரித்தால்தான் பறவைகள் வந்து கூடுகட்டி குடியேறத் தொடங்கும். அதன்பிறகே திறக்க முடியும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com