

சிக்கமகளூரு: சித்ரதுர்காவில் போலி நகைகளை கொடுத்து மோசடி செய்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராதிகா தெரிவித்துள்ளார்.
போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
சித்ரதுர்கா டவுனை சோந்த வியாபாரி ஒருவரை சமீபத்தில் தொடர்பு கொண்ட 3 மர்மநபர்கள், தங்க நகைகள் கொடுப்பதாக ஏமாற்றி போலி நகைகளை விற்று மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து அந்த வியாபாரி போலீசில் புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகைகளை கொடுத்து மோசடி செய்து வந்த 3 பேரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து சித்ரதுர்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதிகா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
3 பேர் கைது
சித்ரதுர்கா மாவட்டத்தில் தங்க நகைகள் கொடுப்பதாகவும், தங்க நாணயங்கள் புதையலாக கிடைத்துள்ளதாகவும் மர்ம கும்பலினர் வியாபாரிகளை குறி வைத்து போலி நகைகள், நாணயங்களை கொடுத்து மோசடி செய்து வந்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் வியாபாரிகளை மோசடி செய்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் அவர்கள், அரப்பனஹள்ளியை சேர்ந்த சுரேஷ் (வயது 25), சேகரப்பா (30), ஹாசன் மாவட்டம் அரிசிகெரேயை சேர்ந்த கேசவமூர்த்தி என்பது தெரியவந்தது. அவர்கள் சித்ரதுர்கா மாவட்டத்தில் பல வியாபாரிகளிடம் மோசடி செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து அரை கிலோ போலி தங்க நகைகள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி கும்பலை பிடித்த போலீசாருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.