முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 16 பேரின் ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது

முன்னாள் எம்.எல்.ஏ.எம்.கே.பாலன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 16 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.
முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 16 பேரின் ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது
Published on

சென்னை,

கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி காலையில் நடைபயிற்சிக்கு சென்ற சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் சிலரால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் சமந்தப்பட்ட பூங்காநகர் மாணிக்கம் உள்ளிட்ட 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை விரைவு கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை, பின்னர் சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.

இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்த வழக்கில், கடந்த 2016-ல் தீர்ப்பு கூறிய இரு நீதிபதிகள் மாற்றுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

இதனையடுத்து வழக்கு 3 நீதிபதிகள் அமர்வின் விசாரணைக்கு சென்றது. இந்த வழக்கை நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், கே.எம்.ஜோசப், வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கீழ்க்கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:- உரிய சாட்சியங்கள், ஆதாரங்களின் அடிப்படையிலேயே குற்றவாளிகள் அனைவருக்கும் கீழ்க்கோர்ட்டு ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது. ஆள் கடத்தல், கூட்டுசதி, கொலை செய்ய உத்தரவிடுதல் உள்ளிட்ட குற்றங்கள் கீழ்க்கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டு உள்ளன. எனவே குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது.

இந்த குற்றவாளிகள் அனைவரும் தங்கள் தண்டனையை அனுபவிக்கும் வகையில் 3 வாரங்களுக்குள் சரண் அடைய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com