5 நாட்கள் ஆகியும் துப்பு துலங்கவில்லை: முன்னாள் பெண் மேயர் கொலையில் பழைய குற்றவாளிகளுக்கு தொடர்பா? பட்டியல் தயாரித்து போலீஸ் விசாரணை

முன்னாள் பெண் மேயர் கொலையில் 5 நாட்கள் ஆகியும் துப்பு துலங்கவில்லை. இதனால் பழைய குற்றவாளிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்று அவர்களது பட்டியலை தயாரித்து போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
5 நாட்கள் ஆகியும் துப்பு துலங்கவில்லை: முன்னாள் பெண் மேயர் கொலையில் பழைய குற்றவாளிகளுக்கு தொடர்பா? பட்டியல் தயாரித்து போலீஸ் விசாரணை
Published on

நெல்லை,

நெல்லை மாநகராட்சி முதல் பெண் மேயர் உமா மகேசுவரி. இவருடைய கணவர் முருகசங்கரன். இவர்கள் 2 பேரும் மேலப்பாளையத்தில் இருந்து ரெட்டியார்பட்டி செல்லும் ரோடு அருகே உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி அவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல், உமா மகேசுவரி, முருகசங்கரன் ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்தனர். அப்போது வீட்டில் இருந்த பணிப்பெண் மாரியும் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஆனால் 5 நாட்கள் ஆகியும் கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து துப்பு எதுவும் துலங்கவில்லை. பல்வேறு தரப்பில் விசாரணை நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த கொலையில் பழைய குற்றவாளிகள் யாரும் இந்த கொலை-கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற புதிய கோணத்தில் போலீசார் தற்போது விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்காக நகை, பணத்துக்காக ஏற்கனவே இதுபோல் கொலை செய்த குற்றவாளிகளின் பட்டியலை போலீசார் தயாரித்து உள்ளனர்.

அதில் குறிப்பாக தென்காசி பகுதியை சேர்ந்த ஒருவர் இதேபோன்ற கொலை வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 3 பேர் கொலை செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய நாளில் சிறையில் இருந்து பரோலில் வெளியே சென்றிருந்த அவர் அதன்பிறகு சிறைக்கு திரும்பி வரவில்லை. எனவே அவருக்கும், இந்த கொலைக்கும் சம்பந்தம் உண்டா? என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதவிர சொத்துப்பிரச்சினை காரணமாக கொலை நடந்ததா? என்று உமா மகேசுவரியின் உறவினர்கள் சிலரை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com