குதிரைக்கு மாந்திரீகம் செய்ததாக கூறி வியாபாரியை தாக்கிய 4 பேர் கைது

ஓமலூர் அருகே குதிரைக்கு மாந்திரீகம் செய்ததாக கூறி வியாபாரியை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
குதிரைக்கு மாந்திரீகம் செய்ததாக கூறி வியாபாரியை தாக்கிய 4 பேர் கைது
Published on

ஓமலூர்,

ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கோட்டமேடு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 55). இவர் குதிரை வியாபாரம் செய்து வருகிறார். மேலும் அந்த பகுதியில் பிளாஸ்டிக் குடங்களையும் விற்று வந்துள்ளார். இவரிடம் நடுப்பட்டியை சேர்ந்த செல்வமணி (30) என்பவர் வந்து, தான் புதிதாக குதிரை வாங்கி உள்ளேன் என்றும், அதனை பார்த்து விட்டு எப்படி உள்ளது? என்று தெரிவிக்கும்படியும் கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து பாபு, நடுப்பட்டிக்கு சென்று செல்வமணியின் குதிரையை பார்த்து விட்டு சென்றார். இந்த நிலையில் அந்த குதிரை தீவனம் சாப்பிடாமல் இருந்துள்ளது. 4 நாட்களாக தீவனம் சாப்பிடாததால், மீண்டும் அவர் பாபுவை வர வழைத்தார். அப்போது பாபுவிடம், செல்வமணி கூறும் போது, நீ பார்த்து விட்டு சென்றது முதல் 4 நாட்களாக குதிரை தீவனம் சாப்பிடவில்லை. நீ குதிரைக்கு மாந்திரீகம் செய்து விட்டு சென்றுள்ளாய் என்று தெரிவித்து தகராறில் ஈடுபட்டார்.

மேலும் செல்வமணி, அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் (24), விஸ்வேஷ் (19), முத்து படையாச்சி (35) ஆகிய 4 பேரும் சேர்ந்து, வியாபாரி பாபுவை தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குதிரைக்கு மாந்திரீகம் செய்ததாக கூறி, வியாபாரியை தாக்கிய செல்வமணி, ராம்குமார், விஸ்வேஷ், முத்துபடையாச்சி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com