இலங்கைக்கு கள்ளப்படகு மூலம் அகதிகளை அனுப்ப முயன்ற இடைத்தரகர்கள் 4 பேர் கைது

இலங்கைக்கு கள்ளப் படகு மூலம் அகதிகளை அனுப்ப முயன்ற இடைத்தரகர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இலங்கைக்கு கள்ளப்படகு மூலம் அகதிகளை அனுப்ப முயன்ற இடைத்தரகர்கள் 4 பேர் கைது
Published on

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் நாகை கியூ பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேளாங்கண்ணி சின்ன மாதா கோவில் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் இலங்கை திரிகோணமலை நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஜெகத்மோகன், அவரது மனைவி சாந்தினி மற்றும் 2 குழந்தைகள் என்பதும், மதுரை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் இடைத்தரகர்கள் மூலம் வேளாங்கன்னி அருகே உள்ள செருதூர் கடற்பகுதியில் இருந்து கள்ளப்படகு மூலம் இலங்கை செல்வதற்காக காத்திருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கீழையூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 4 பேரையும் கைது செய்து, உரிய பாஸ்போர்ட் இல்லாமல் கடல் மார்க்கமாக தப்பி செல்ல முயன்றதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இவர்கள் இலங்கைக்கு செல்ல இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களை தேடி வந்தனர்.

அப்போது ஜெகத்மோகன் குடும்பத்தினரை இலங்கைக்கு தப்பிசெல்ல ஏற்பாடு செய்தது வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை பகுதியை சேர்ந்த நூர்முகமது(வயது54), நாமக்கல் மாவட்டம் எம்.மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த செல்வம் (35), சென்னை வளசரவாக்கம் வேலன் நகரை சேர்ந்த விக்ரமசிங்கம் (61), வேதாரண்யம் நாலுவேதபதி பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (47), சிவசங்கர் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஜெகத்மோகன் குடும்பத்தினரை சந்திக்க வேளாங்கண்ணிக்கு வந்த இடைத்தரகர்களான நூர்முகமது, செல்வம், விக்ரமசிங்கம், ரங்கநாதன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சிவசங்கரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com