

தேனி,
சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் அமைந்துள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் தேனீ வளர்ப்போருக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் காதி-கிராமத் தொழில்கள் ஆணையத்துடன் இணைந்து கண்டுணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
சிறப்பு பயிற்சியாளர்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களை சேர்ந்த 200 விவசாயிகள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிகள் நிறைவு பெற்றவுடன் பயனாளிகளுக்கு பயணப்படி, சான்றிதழ் மற்றும் 80 சதவீத மானியத்துடன் தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட உள்ளன.
எனவே, பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் 04546-247245 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களின் பெயர், முகவரியை தெரிவித்து முன்பதிவு செய்து பயன்பெறலாம். இத்தகவலை சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தெரிவித்துள்ளார்.