

சாலை மறியல்
சென்னை கிண்டி சின்னமலை வெங்கடாபுரம் குடிசை பகுதியை சேர்ந்தவர் பாரிஜாதம். இவரது குடிசை வீட்டின் ஒரு பகுதி நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள உடனடியாக தீயை அனணத்துவிட்டனர்.இந்த பகுதியில் உள்ள குடிசை வீடுகள் அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது. யாரோ மர்ம நபர்கள் வேண்டும் என்றே குடிசைகளுக்கு தீ வைப்பதாக கூறி சின்னமலை தாலுகா ஆபீஸ் சாலையில் பஸ் பணிமனை அருகே திடீரென அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமரா
இதுபற்றி தகவல் அறிந்ததும் கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் சுப்பராயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார் மனுவை போலீசார் பெற்றுக்கொண்டதால் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
தீ விபத்து நடந்த குடிசை வீட்டில் தடய அறிவியல் நிபுணர் சோபியா ஆய்வு செய்துபோது, யாரோ தீ வைத்ததன் காரணமாக குடிசை தீப்பிடித்து இருக்கலாம் என கூறினார்.இதையடுத்து கிண்டி போலீசார் சார்பில், அந்த பகுதியில் குடிசை வீடுகளை தீ வைத்து எரிப்பவர்களை கண்டுபிடிக்க அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.