அடிக்கடி மின்சாரம் தடை; ஆத்திரத்தில் மின்வாரிய ஊழியருக்கு அடி உதை

திருவள்ளூர் அருகே அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்பட்டதால் ஆத்திரத்தில் மின்வாரிய ஊழியருக்கு அடி உதை விழுந்தது.
அடிக்கடி மின்சாரம் தடை; ஆத்திரத்தில் மின்வாரிய ஊழியருக்கு அடி உதை
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மணவாள நகரை சேர்ந்தவர் குப்பன்.இவர் மணவாளநகர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் கம்பியாளர் (லைன் மேனாக) வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் மணவாளநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக அடிக்கடி மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டு இருந்தது.

இதன் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.நேற்று இரவு வழக்கம் போல் மணவாளநகர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதை கண்ட மின்வாரிய ஊழியர் குப்பன் அங்கு சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அச்சமயம் அங்கு வந்த 5 பேர் எங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. ஏன் இதை சீர் செய்யவில்லை என அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 5 பேர் அங்கிருந்த இரும்பு கம்பியால் குப்பனின் தலையில் பலமாக தாக்கினார்.இதில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட அவர் சரிந்து கீழே விழுந்தார்.

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தலையில் 7 தையல் போட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதை கண்டித்து சிலர் மணவாளநகர் துணை நிலத்திற்குள் புகுந்து அங்கிருந்த கம்ப்யூட்டர்,மேஜை நாற்காலிகளை அடித்து சூறையாடி உள்ளனர். இதுகுறித்து மணவாளநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com