ஆந்திராவில் இருந்து சென்னைக்கு போதை மாத்திரைகள் கடத்திய கல்லூரி மாணவர் கைது

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு போதை மாத்திரைகள் கடத்திய கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு போதை மாத்திரைகள் கடத்திய கல்லூரி மாணவர் கைது
Published on

பெரம்பூர்,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் எதிரே உள்ள மேம்பாலம் அருகே நேற்று 3 பேர் சந்தேகப்படும்படியாக நின்றனர். அந்த வழியாக ரோந்து சென்ற பூக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன் மற்றும் போலீஸ்காரர் ராஜசேகர் ஆகியோர் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்செல்ல முயன்றனர்.

அப்போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேரையும் பூக்கடை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், 2 பேரிடமும் போதை மாத்திரைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணையில் ஒருவர், சென்னை தியாகராயநகர் கண்ணம்மாபேட்டை பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் நவீன் (வயது 19) என்பதும், இவர் மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது. மற்றொருவர் அதே பகுதியைச்சேர்ந்த மீன் வியாபாரி அரிகிருஷ்ணன் (19) என்பதும், தப்பி ஓடிய இவர்களின் கூட்டாளி சத்யா என்பதும் தெரிந்தது.

இவர்கள் 3 பேரும் சேர்ந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து போதை மாத்திரைகளை ரெயில் மூலம் கடத்தி வந்து மடிப்பாக்கத்தைச் சேர்ந்த தமிழன் என்பவருக்கு கொடுப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

ஆந்திராவில் இருந்து குறைந்த விலைக்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்து, சென்னையில் ஒரு மாத்திரையை ரூ.200, ரூ.250 என விற்பனை செய்வதும் தெரிந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 300 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய அவர்களின் கூட்டாளியை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com