சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.8 லட்சம் சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.8 லட்சம் மதிப்புள்ள 14 கிலோ சுறா மீன் துடுப்புகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.8 லட்சம் சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பெரும் அளவில் கடல் பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் செல்லவந்த திருச்சியைச் சேர்ந்த தர்பார் லத்தீப்(வயது 60) என்பவர் கையில் அட்டை பெட்டியுடன் குடியுரிமை சோதனையை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏற சென்றார். அவரை சந்தேகத்தின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர், முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

இதனால் அவரிடம் இருந்த உடைமைகளை சோதனை செய்தனர். அதில், அவரிடம் இருந்த அட்டை பெட்டிக்குள் சுறா மீன் துடுப்புகளை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் உள்ள பிரபல நட்சத்திர உணவகங்களில் இந்த சுறா மீன் துடுப்புகளை கொண்டு சூப் தயாரிக்க பயன்படுத்தப்படுவதும், இது உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்ததாக இருக்கும் என்பதால் சுறா மீன் துடுப்புகளுக்கு அதிக விலை தரப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் சுறா மீன், அழிந்துவரும் மீன் வகை என்பதால் வெளிநாடுகளுக்கு அனுப்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள 14 கிலோ சுறா மீன் துடுப்புகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லத்தீப்பிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com