கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர் நடிகர் ராக்லைன் சுதாகர் திடீர் மரணம் - படப்பிடிப்பின் போது மாரடைப்பால் உயிர் பிரிந்தது

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த நடிகர் ராக்லைன் சுதாகர், படப்பிடிப்பில் பங்கேற்ற போது திடீரென மரணம் அடைந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.
கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர் நடிகர் ராக்லைன் சுதாகர் திடீர் மரணம் - படப்பிடிப்பின் போது மாரடைப்பால் உயிர் பிரிந்தது
Published on

பெங்களூரு,

கன்னட திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து வந்தவர் ராக்லைன் சுதாகர்(வயது 65). பழம்பெரும் நடிகரான இவர் வாஸ்துபிரகரா, அய்யோராமா, டோபிவாலா, முகுந்தா முராரி, பஞ்சரங்கி, 5-வது தலைமுறை, லல் இன் மண்டியா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து உள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராக்லைன் சுதாகருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சையால் ராக்லைன் சுதாகர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பி இருந்தார்.

இதையடுத்து கன்னட இயக்குனர் சசிதர் இயக்கி வரும் சுகர்லெஸ் என்ற படத்தின் படப்பிடிப்பில் ராக்லைன் சுதாகர் கலந்து கொண்டார். இந்த நிலையில் நேற்று பன்னரகட்டா பகுதியில் சுகர்லெஸ் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் கலந்து கொண்ட ராக்லைன் சுதாகர் மேக்-அப் செய்து கொள்வதற்காக தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தில் அவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் ராக்லைன் சுதாகரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராக்லைன் சுதாகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறினர். இதனை கேட்டு படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து ராக்லைன் சுதாகரின் உடல் அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ராக்லைன் சுதாகர் மறைவுக்கு கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com