துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.23 லட்சம் தங்கம், குங்குமப்பூ கடத்தல் 3 பேரிடம் விசாரணை

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள், மடிக்கணினிகள், ஈரான் நாட்டு குங்குமப்பூ ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.23 லட்சம் தங்கம், குங்குமப்பூ கடத்தல் 3 பேரிடம் விசாரணை
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்க கட்டிகள் மற்றும் நகைகள் பெரும் அளவில் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த 3 பேர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், 3 பேரையும் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள்.

அவர்களது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 8 மடிக்கணினிகள், வெளிநாட்டு சிகரெட்டுகள், ஈரான் நாட்டு குங்குமப்பூ ஆகியவற்றை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும் 3 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்களது உள்ளாடைகளில் தலா 35 கிராம் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. 3 பேரிடம் இருந்தும் ரூ.23 லட்சம் மதிப்புள்ள 105 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் 3 பேரும் தங்கம், குங்குமப்பூ உள்ளிட்டவைகளை துபாயில் இருந்து சென்னைக்கு யாருக்காக கடத்தி வந்தனர்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com