கேரள சிறையில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டார் மாவோயிஸ்டு டேனிஸ், ஊட்டி கோர்ட்டில் ஆஜர்

கேரள சிறையில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு மாவோயிஸ்டு டேனிஸ், ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க தமிழக போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கேரள சிறையில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டார் மாவோயிஸ்டு டேனிஸ், ஊட்டி கோர்ட்டில் ஆஜர்
Published on

ஊட்டி,

கேரள மாநிலம் அகழி என்ற இடத்தில் கடந்த ஆண்டு மாவோயிஸ்டு இயக்கத்துக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் பழங்குடியின மக்களிடம் பேசியதாக கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியை சேர்ந்த டேனிஸ் என்ற கிருஷ்ணா(வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நெடுகல்கொம்பை கிராமத்தில் மாவோயிஸ்டுகள் புகுந்து அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொலக்கொம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் டேனிசுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறும் கொலக்கொம்பை போலீசார் ஊட்டி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து கோர்ட்டில் வாரண்டு பெற்று கேரள போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி திருச்சூர் சிறையில் இருந்து டேனிசை அம்மாநில போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஊட்டி கோர்ட்டுக்கு நேற்று காலை சுமார் 10 மணியளவில் அழைத்து வந்தனர்.

பின்னர் மதியம் 12.45 மணியளவில் கேரள போலீசார் டேனிசை நீதிபதி வடமலை முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அரசு தரப்பில் வக்கீல் பால நந்தகுமார் ஆஜராகி வழக்கில் சம்பந்தப்பட்ட டேனிசை 3 நாட்கள் தமிழக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார். டேனிஸ் தரப்பில் வக்கீல்கள் ஏ.ராஜா, எஸ்.ராஜா ஆகியோர் ஆஜரானார்கள்.

அப்போது டேனிஸ் நீதிபதியிடம், கொலக்கொம்பை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்த வழக்குக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. பொய் வழக்கு போடப்பட்டு இருக்கிறது. என் மீது ஏற்கனவே உள்ள பல்வேறு வழக்குகளில் ஜாமீன் கிடைத்து உள்ளது. அடுத்த மாதம் நான் ஜாமீனில் வெளியே வந்து விடுவேன். இதனால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது என்று தெரிவித்தார். இதையடுத்து டேனிசை கொலக்கொம்பை போலீசார் கைது செய்யவும், வருகிற 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை மாலை 3 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு கேரள போலீசார் டேனிசை வெளியே அழைத்து வந்தபோது அவர், இந்துத்துவம் மற்றும் கார்ப்பரேட்டுக்கு எதிராக தொழிலாளர்களே பேராடுக, தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும், சுதந்திர காஷ்மீர் வெல்லட்டும், மாவோயிஸ்டு ஜிந்தாபாத் என்று கையை உயர்த்தி கோஷம் எழுப்பினார். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மாலை 3 மணிக்கு மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது அரசு தரப்பில் பிரமாண பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டேனிஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து இரவு 7 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் டேனிசை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும், நாளை(அதாவது இன்று) கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின்னர் கொலக்கொம்பை போலீசார் டேனிசை கைது செய்து, பலத்த பாதுகாப்புடன் விசாரணைக்காக அழைத்து சென்றார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com