மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் பொருட்கள் பறிமுதல் வாலிபரிடம் விசாரணை

மலேசியாவில் இருந்து சென்னைக்கு தங்கம் மற்றும் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியான கைக்கெடிகாரங்கள், மூக்கு கண்ணாடிகள் கடத்தி வந்த வாலிபரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் பொருட்கள் பறிமுதல் வாலிபரிடம் விசாரணை
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியான 620 கைக்கெடிகாரங்கள், 240 விலை உயர்ந்த மூக்கு கண்ணாடிகள் இருந்தன. பின்னர் அந்த வாலிபரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, அவரது உடலில் சிறிய அளவிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து அந்த வாலிபரிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கம், கைக்கெடிகாரங்கள், மூக்கு கண்ணாடிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை யாருக்காக மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com