சிறையில் இருந்து ஜாமீனில் வந்த வாலிபர் தற்கொலை

கூடுவாஞ்சேரி அருகே போலீஸ் என்று கூறி கல்லூரி மாணவர்களை தாக்கிய வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறையில் இருந்து ஜாமீனில் வந்த வாலிபர் தற்கொலை
Published on

வண்டலூர்,

டெல்லியை சேர்ந்தவர் பிரின்ஸ் (வயது 21). தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் டேவிட் (19). நண்பர்களான இவர்கள் இருவரும் கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் நரசிம்மன் நகர் பகுதியில் தங்கி பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

இவர்களிடம் கடந்த 8-ந் தேதி போலீஸ் என்று கூறி 5 பேர் கொண்ட கும்பல் தகராறில் ஈடுபட்டது. தகராறு முற்றிய நிலையில், பிரின்சை 5 பேரும் சேர்ந்து கத்தியால் வெட்டினர். இதை தடுக்க வந்த டேவிட்டையும் தாக்கிவிட்டு தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசில் டேவிட் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் அவர்கள் போலீஸ் என்று கூறி தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையொட்டி கூடுவாஞ்சேரி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ஆனந்தன் (28), நந்திவரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ஆனந்த் (28) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நந்திவரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ஆனந்த் மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர் ஆனந்த் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலைய நண்பர்கள் குழுவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பணிபுரிந்தார். அப்போது இன்ஸ்பெக்டர் உள்பட போலீஸ் அதிகாரிகளுக்கு தற்காலிக டிரைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com