தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த குரங்கு, அணில், ஓணான் பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த குரங்கு, அணில், ஓணான் ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்பி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த குரங்கு, அணில், ஓணான் பறிமுதல்
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

அப்போது தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த சுரேஷ் (வயது 28) என்பவர் சந்தேகத்திற்கு இடமாக அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டு இருந்தார்.

அவரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் இருந்த 4 பிளாஸ்டிக் பெட்டிகளை பிரித்து பார்த்தபோது, வன உயிரினங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த 4 பெட்டிகளிலும் வட மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் வாழும் 12 பச்சோந்திகள், ஓணான்கள் மற்றும் 2 சிறிய குரங்குகள், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் வாழும் 2 முக்கோண அணில்கள், தென் அமெரிக்கா நாடுகளில் உயிர்வாழும் 3 அபூர்வ வகை குரங்குகளும், வட மற்றும் மத்திய அமெரிக்காவில் வாழும் கருப்பு, சாம்பல் நிற அணில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அதை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர், இவற்றை யாருக்காக எதற்காக கடத்தி வந்தீர்கள்? என்று கேட்டனர். அதற்கு சுரேஷ் இவற்றை தாய்லாந்து விமான நிலையத்தில் ஒருவர் கொடுத்து அனுப்பியதாகவும், இவற்றை சென்னை விமான நிலையத்தில் வந்து ஒரு நபர் பெற்றுக் கொள்வார்கள் என்று கூறினார்.

பின்னர் சுரேசை விமான நிலையத்தின் வெளியே அழைத்து வந்த அதிகாரிகள் அவற்றை யாராவது பெறுவதற்கு வருகிறார்களா? என்று கண்காணித்தனர். அப்போது இவைகளை வாங்கி செல்ல வந்த 2 வாலிபர்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் மீட்கப்பட்ட உயிரினங்களை வண்டலூர் உயிரியியல் பூங்கா டாக்டர்கள் வந்து பரிசோதனை செய்தனர். அதில் 4 அணில்கள் இறந்து இருந்தன. மற்றவை ஆரோக்கியமாக உள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிற நாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் விலங்கினங்களை உரிய மருத்துவபரிசோதனை செய்யாமல் நம் நாட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என்பதால், குரங்கு, அணில், ஓணான் ஆகியவற்றை தாய்லாந்து நாட்டிற்கு நேற்று திருப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சுரேஷ் உள்பட 3 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com