மாடியில் இருந்து தவறி மின்கம்பியில் விழுந்தவர் பரிதாப சாவு

நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது மாடியில் இருந்து தவறி மின்கம்பியில் விழுந்த தனியார் நிறுவன ஊழியர், மின்சாரம் பாய்ந்து பரிதாபமாகச் செத்தார்.
மாடியில் இருந்து தவறி மின்கம்பியில் விழுந்தவர் பரிதாப சாவு
Published on

வில்லியனூர்,

ஒரிசா மாநிலம் கெத்து ஜோர் மாவட்டம் ஜமுனாலயா கிராமத்தை சேர்ந்தவர் பிதாம்பர் நாயக் (வயது 25). புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உறுவையாறு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரும், மேலும் 5 பேரும் சேர்ந்து அதே பகுதியில் உள்ள 2 மாடி வாடகை வீட்டில் தங்கி இருந்தனர்.

இந்தநிலையில் பிதாம்பர் நாயக்குடன் தங்கியிருந்த அவருடைய நண்பர் ஒருவருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் ஆகும். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் மது விருந்துடன் நண்பரின் பிறந்த நாளை கொண்டாடினார்கள்.

அப்போது மதுகுடித்த போதையில் இருந்த பிதாம்பர் நாயக், வீட்டின் கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் நிலைதடுமாறி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது மாடியையொட்டி சென்ற மின்கம்பியில் அவர் சிக்கினார். இதில் அவருடைய உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் சிறிது நேரத்தில் பிதாம்பர் நாயக் பரிதாபமாகச் செத்தார்.

இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com