வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் ஒடிசாவை சேர்ந்த வாலிபர் மின் கோபுரத்தில் ஏறி மின்வயரை பிடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை
Published on

கும்மிடிப்பூண்டி,

ஒடிசா மாநிலம் களிப்பேடா கிராமத்தை சேர்ந்தவர் கருணா ஜானி(வயது 36). திருமணமான இவர் தனது குடும்பத்தினரை ஒடிசாவிலேயே விட்டு விட்டு கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூர் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

தனது நண்பரான ரபத்குமாரை பார்க்க கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார். தனது நண்பர் ரபத்குமார் மூலம் தொழிற்சாலைகளில் தனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா? என கருணா ஜானி விசாரித்தார்.

ஆனால் அவருக்கு வேலை ஏதுவும் கிடைக்கவில்லை. தினமும் பல தொழிற்சாலைகளுக்கு நடையாய் நடந்தும் வேலை கிடைக்காததால் அவர் மனம் உடைந்தார்.

இந்த நிலையில் விரக்தி அடைந்த கருணா ஜானி, கடந்த 15-ந் தேதி பூவலம்பேடு ஏரிக்கரையையொட்டி உள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தின் மீது ஏறி மின்கம்பியை பிடித்துள்ளார்.

இதனால் உடல் கருகி தூக்கி வீசப்பட்ட அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி கருணா ஜானி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com