முழு அடைப்பு போராட்டம்: மாவட்டத்தில் பஸ்கள் வழக்கம் போல் ஓடின

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இருப்பினும் மாவட்டம் முழுவதும் பஸ்கள் வழக்கம் போல் ஓடின.
முழு அடைப்பு போராட்டம்: மாவட்டத்தில் பஸ்கள் வழக்கம் போல் ஓடின
Published on

கடலூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை எதிர்த்தும், இந்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் டிசம்பர் 8-ந் தேதி (அதாவது நேற்று) முழு அடைப்பு போராட்டம் (பாரத் பந்த்) நடத்தப்படும் என டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். இவர்களுக்கு ஆதரவாகவும், 3 வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை வலுவாக நடத்துவதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டனர்.

முழுஅடைப்பு

அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சியினர் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்திற்கு வணிகர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் மாவட்டத்தில் புதுப்பேட்டை, விருத்தாசலம், சிதம்பரம், நெல்லிக்குப்பம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் இயங்காமல் பூட்டிக்கிடந்தன. பால் விற்பனை நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், மருந்து கடைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கின. ஒரு சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான கடைகள் மூடிக்கிடந்ததால் மார்க்கெட் பகுதிகள், கடைவீதிகள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன.

வழக்கம்போல் இயங்கிய பஸ்கள்

மேலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றாலும், மாவட்டத்தில் வழக்கம்போல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் இயக்கப்பட்டன. இதற்கிடையே தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் அரசு போக்குவரத்துக்கழகம் உறுதியாக இருந்து அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏற்கனவே விடுப்பில் இருப்போரையும் உடனடியாக பணிக்கு வரவழைத்து அவர்கள் மூலமாக அரசு பஸ்சை தடையின்றி இயக்க ஏற்பாடு செய்தனர்.

கடலூர்

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில், மாவட்ட தலைநகரான கடலூரில் மட்டும் நேற்று வழக்கம்போல் அனைத்து கடைகள் திறக்கப்பட்டன. கடைகளில் வழக்கம்போல் மக்கள் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் மேற்பார்வையில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com