கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற கோரி புதுவையில் 16-ந் தேதி முழு அடைப்பு போராட்டம்

கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்ப பெற கோரி வருகிற 16-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற கோரி புதுவையில் 16-ந் தேதி முழு அடைப்பு போராட்டம்
Published on

புதுச்சேரி,

புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி தடையாக இருந்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்தநிலையில் கவர்னரை திரும்ப பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன், ராஷ்ட்ரீய ஜனதாதள மாநில தலைவர் சஞ்சீவி உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியிடம் மனு

கூட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்ப பெற கோரி கடந்த 26-ந் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஆனால் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கவர்னர் கிரண்பெடியும் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. எனவே கவர்னரை கண்டித்து நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) அண்ணாசிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டிருந்தோம். அவர் வருகிற 10-ந் தேதி நேரம் ஒதுக்கி உள்ளார்.

அன்றைய தினம் டெல்லி சென்று அவரை சந்தித்து கையெழுத்து இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட கையெழுத்துகளை அவரிடம் ஒப்படைக்க உள்ளோம். மத்திய அரசு கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை மனுவும் அளிக்க உள்ளோம்.

முழு அடைப்பு போராட்டம்

மத்திய அரசு கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு புதுவையை வஞ்சித்து வரும் நிலை, கவர்னர் கிரண்பெடி மாநில அரசுக்கு எந்தெந்த வழிகளில் தொல்லை கொடுத்து வருகிறார் என்பது குறித்தும், முழு அடைப்பு போராட்டம் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூற வருகிற 14, 15-ந் தேதிகளில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் தெருமுனை பிரசாரம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com