திருமணிமுத்தாறு தரைப்பாலத்தில் தேங்கிய ரசாயனம் கலந்த நுரை போக்குவரத்து பாதிப்பு

வெண்ணந்தூர் அருகே திருமணிமுத்தாறு தரைப்பாலத்தில் தேங்கிய ரசாயனம் கலந்த நுரையால் 2-வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமணிமுத்தாறு தரைப்பாலத்தில் தேங்கிய ரசாயனம் கலந்த நுரை போக்குவரத்து பாதிப்பு
Published on

வெண்ணந்தூர்,

சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வெண்ணந்தூர் - மல்லசமுத்திரம் இடையே மதியம்பட்டி கிராமத்தின் அருகே திருமணிமுத்தாற்றில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக வெண்ணந்தூரில் இருந்து மல்லசமுத்திரத்திற்கு கூடுதலாக 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வாகன ஓட்டிகள் சென்றனர். மேலும் நடுப்பட்டி, வெண்ணந்தூர், சபரிபாளையம், செம்மாண்டப்பட்டி, அளவாய்பட்டி ஆகிய 5 கிராம மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக இரண்டாவது நாளாக நேற்றும் திருமணிமுத்தாற்றில் தண்ணீர் அதிகம் வந்தது. இதில் ரசாயனம் கலந்த நீரும் சேர்ந்து வந்ததால் பெருக்கெடுத்து வந்த மழைநீரில் அதிகப்படியான நுரை ஏற்பட்டு மல்லசமுத்திரம் - மதியம்பட்டி தரைப்பாலத்திலும், சாலையிலும் மலைபோல் நுரை தேங்கி நின்றது.

சாலையை மறைக்கும் அளவுக்கு நுரை தேங்கி இருந்ததால் பொதுமக்கள் மற்றும் கல்லூரி, பள்ளி வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். 2-வது நாளாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் நுரையை அகற்றும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே மதியம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மதியம்பட்டி வழியாக திருமணிமுத்தாறு செல்கிறது. இதனால் மதியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற்று வந்தது.

இந்த நிலையில் திருமணிமுத்தாறு பகுதியோரத்தில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், திருமணி முத்தாற்றில் கலப்பதால் அந்த ரசாயனம் கலந்த கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து வருவதால் அந்த தண்ணீரை விவசாயத்துக்கோ, பிற உபயோகங்களுக்கோ பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த ரசாயனம் கலந்த கழிவுநீரால் அதிகளவு நுரை ஏற்பட்டு அவ்வப்போது போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் ஒன்றியம் கொன்னையாறு கிராமத்தில் உள்ள தடுப்பணைக்கு வந்த மழைநீரில் சாயப்பட்டறை கழிவுநீர் கலந்து வந்ததால் தண்ணீர் துர்நாற்றம் வீசுவதாகவும், நுரை பொங்கியும் காணப்படுவதால் அந்த தண்ணீரை விவசாயத்திற்கோ, குடிக்கவோ, குளிக்கவோ பயன்படுத்த முடியவில்லை என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

எனவே சாயக்கழிவுநீர் ஆற்றுநீரில் கலப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com