

சின்னாளப்பட்டி:
திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பதிவாளராக சிவக்குமார் பணியாற்றி வந்தார். இவரது பதவிக்காலம் இன்னும் 6 மாதங்களில் முடிவடைய உள்ளது. இந்தநிலையில் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று பதிவாளர் சிவக்குமார் பெயரும், படமும் நீக்கப்பட்டு, பொறுப்பு பதிவாளர் என பேராசிரியர் சேதுராமன் பெயரும், படமும் இடம் பெற்றிருந்தது.
இதுகுறித்து பல்கலைக்கழக தரப்பில் கேட்டபோது, பதிவாளர் சிவக்குமார் மீது தணிக்கை துறையினர் வைத்த குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணை நடந்து வருகிறது. இதனால் அதிலிருந்து பதிவாளர் தன்னை பாதுகாத்துக்கொள்ள துணைவேந்தருக்கு தெரியாமலும், துணைவேந்தர் ஒப்புதல் இன்றியும் தணிக்கை துறைக்கு கடிதம் எழுதியது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பதிவாளர் பதவியில் நீடித்தால் விசாரணையில் தொய்வு ஏற்படும் என்பதால் நேற்று மாலை துணைவேந்தர் ரங்கநாதன், பதிவாளர் சிவக்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் உடனடியாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான பேராசிரியர் சேதுராமன், பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் உடனடியாக பொறுப்பேற்றுக்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது.