குப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால்கள்: உடலை தேடும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரம்

பெருங்குடி மாநகராட்சி குப்பை கிடங்கில் கொலையான பெண்ணின் கை, கால் கிடந்ததையொட்டி துப்பு துலக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
குப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால்கள்: உடலை தேடும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரம்
Published on

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த துரைப்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் சென்னை மாநகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கிற்கு நேற்று முன்தினம் மாலை கோடம்பாக்கம் பவர் அவுஸ் பகுதியில் இருந்து குப்பைகள் லாரியில் கொண்டு வந்து கொட்டப்பட்டது. அப்போது கொட்டப்பட்ட குப்பையில், கை மற்றும் 2 கால்கள் இருந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.

பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று நடத்திய சோதனையில் அது பெண்ணின் கை மற்றும் கால்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. அதில், வலது கையில் டிராகன் படமும் வலது கை தோள் பட்டையில் சிவன், பார்வதி உருவமும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. காலில் பெண்கள் அணியும் மெட்டி போட்டதற்கான அடையாளம் இருந்தது.

இதையடுத்து கை, கால்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணை கொலை செய்து குப்பை தொட்டியில் வீசியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி துப்பு துலக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கள்ளதொடர்பு காரணமாக பெண்ணை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டியில் வீசினார்களா?

கை, கால்களை குப்பை தொட்டியில் வீசியது போல் உடல் மற்றும் தலை பகுதிகளை எங்கு வீசியுள்ளனர்? சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எங்கேயாவது பெண்ணின் உடல் மற்றும் பாகங்கள் இருக்கிறதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மேலும் காணாமல் போன பெண்கள் பட்டியலில் கொலை செய்யப்பட்ட பெண் இருக்கிறாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பெண்ணின் கைரேகையை கொண்டு கொலை செய்யப்பட்டது யார்? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com