

தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கலெக்டர் அலுவலகம் வந்த வாலிபர் ஒருவர் மறைத்து எடுத்து வந்த கேனில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்பகுதியில் நின்று கொண்டு இருந்த போலீசார் ஓடி வந்து அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், போடி திருமலாபுரம் சாமியார்சந்து பகுதியை சேர்ந்த முருகன் மகன் கருப்பசாமி (வயது 27) என்பதும், அவர் கட்டிட ஒப்பந்ததாரராக உள்ளதும் தெரிய வந்தது.
தற்கொலைக்கு முயன்றது குறித்து கருப்பசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், நானும், ஒரு பெண்ணும் காதலித்தோம். அந்த பெண் தேனியில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் எனது காதலிக்கு அவருடைய பெற்றோர் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் அவரின் வீட்டுக்கு சென்று கேட்டேன். அங்கு இருந்தவர்கள் என்னை தாக்கிவிட்டனர்.
எனவே, எனது காதலியை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து தற்கொலைக்கு முயன்றதாக கருப்பசாமி மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.