கீழ்க்கட்டளை அருகே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி தாய்-மகள் உடல் நசுங்கி பலி

கீழ்க்கட்டளை அருகே ஸ்கூட்டரில் வந்த போது தடுமாறி கீழே விழுந்தநிலையில், மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி தாயும், 5 வயது மகளும் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள்.
கீழ்க்கட்டளை அருகே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி தாய்-மகள் உடல் நசுங்கி பலி
Published on

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த திரிசூலம் அம்மன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சுதா (வயது 27). இவர்களுக்கு ஷிவானி (5) என்ற மகளும் தீபக் (2) என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று சுதா தனது குழந்தைகளான ஷிவானி, தீபக் ஆகியோருடன் கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்றார்.

அதன் பின்னர், அவரது அம்மா வீட்டில் இருந்து புறப்பட்டு குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் திரிசூலத்தில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கீழ்க்கட்டளை அருகே உள்ள ஈச்சங்காடு மேடவாக்கம் மெயின் ரோட்டில் வந்தபோது, பின்னால் வந்த ஆட்டோ ஒன்று சுதா வந்த ஸ்கூட்டரின் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி சுதாவின் ஸ்கூட்டர் கீழே சாய்ந்தது. அதில், சிறுமி ஷிவானியும் சிறுவன் தீபக்கும் வண்டியிலிருந்து விழுந்தனர். அப்போது மேற்கு தாம்பரத்தில் இருந்து தியாகராயநகர் நோக்கி சென்ற மாநகர பஸ் ஒன்று சாலையில் விழுந்து கிடந்த சுதா, சிறுமி ஷிவானி மீது ஏறி இறங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் தாய், மகள் 2 பேரும் துடிதுடித்து பலியானார்கள். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் சிறுவன் தீபக் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினான்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பலியாகி கிடந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இந்த விபத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஆத்திரத்தில் பஸ்கண்டக்டர் பழனி என்பவரை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் தங்கையாவிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com