

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆசிரியர் நியமனத்தில் புதிதாக வரக்கூடிய ஆசிரியர்களுக்கும் 2013ம் ஆண்டு வெயிட்டேஜ் உள்ளவர்களுக்கும் எப்படி அதை பரிசீலிப்பது என்பது குறித்து அரசு கோப்புகள் நகர்ந்து கொண்டுள்ளது. மிக விரைவில் அதற்கான நல்ல முடிவுகள் மேற்கொள்ளப்படும். மேலும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எங்கெங்கு இருக்கிறதோ அவை நிரப்பப்படும்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று தொடர்ந்து நாம் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். பிளஸ்1 பொதுத்தேர்வுக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளில் தற்போது விடைத்தாள்கள் மாணவமாணவிகளுக்கு சரியான முறையில் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் ஆசிரியர்களுக்கும் கேள்வித்தாள்கள் எப்படி வருகிறது என்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், உங்களுக்கு அரசியல் தெரியாது என்று முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருக்கிறாரே? என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், யார் யாரோ கேட்கின்ற கேள்விக்கு நான் பதில் சொல்வது வழக்கம் இல்லை. அவரவர்கள் ஏதோ கருத்துக்களை கூறி கொண்டிருப்பார்கள். அதற்கெல்லாம் நான் பதில் அளித்து கொண்டிருந்தால் கல்வி துறையின் வளர்ச்சி மங்கி போய்விடும். என்றார்.