

பெரம்பலூர்,
பெரம்பலூரில் புதிய பஸ்நிலையம் எதிரில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் அலுவலகம் அருகில் ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டில் பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதி புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இந்த விடுதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய இந்த விடுதியில் பணிபுரியும் மகளிர் தங்கும் அறைகள், விடுதி காப்பாளர் அறை மற்றும் அலுவலகம் என்று 25 அறைகளும், சமையலறையுடன் இணைந்த உணவுக்கூடமும் என அனைத்து அடிப்படை வசதிகளுடனும் உள்ளது.
பணிபுரியும் மகளிர்கள் மகிழ்ச்சி
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இந்த விடுதி பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் நான்கு ரோடு பகுதியில் முத்துலட்சுமிநகரில் தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது விடுதிக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டு உள்ளதன் மூலம் பணிபுரியும் மகளிர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற காணொலி காட்சி நேரலை நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நந்தகுமார், தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., மாவட்ட சமூகநல அலுவலர் (பொறுப்பு) முத்துமீனாள், பொதுப்பணித்துறை பொறியாளர் காந்தரூபன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.