மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; தனியார் கம்பெனி மேற்பார்வையாளர் பலி

ஜீயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் தனியார் கம்பெனி மேற்பார்வையாளர் உயிரிழந்தார். அதிர்ச்சியில் மயங்கி விழுந்த அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; தனியார் கம்பெனி மேற்பார்வையாளர் பலி
Published on

ஜீயபுரம்,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தாளியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல்(வயது 35). இவர் ஊட்டியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தேவிகா(30). இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்று உள்ளது.

திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குமரவேல் சொந்த கிராமத்திற்கு வந்திருந்தார். பின்னர் கணவர்-மனைவி இருவரும் நேற்று திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ஜீயபுரம் பழுர் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்த போது கோவையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்திச் செல்ல முயன்றது. அப்போது குமரவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த குமரவேலின் உடலின் மீது பஸ்சின் முன் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மயங்கி விழுந்த மனைவி

இந்த விபத்தில் தேவிகா அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினாலும் கணவர் இறந்ததை பார்த்ததும் அங்கேயே மயங்கி விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் தேவிகாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது.

குமரவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு தொட்டியம் பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சின்னத்தம்பி(51) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com