திருச்சியில் அரசு பஸ் டிரைவர்- கண்டக்டர்கள் திடீர் போராட்டம் பஸ்களை இயக்க மறுத்ததால் பரபரப்பு

திருச்சியில் அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு, பஸ்களை இயக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் அரசு பஸ் டிரைவர்- கண்டக்டர்கள் திடீர் போராட்டம் பஸ்களை இயக்க மறுத்ததால் பரபரப்பு
Published on

திருச்சி,

திருச்சி கோஹினூர் தியேட்டர் அருகே மலைக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு மாநகரில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் பணிமனை முன்பு திடீரென டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பஸ்களை இயக்க மறுத்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் விரைந்து சென்றனர். மேலும் போக்குவரத்து கழக அதிகாரிகளும் விரைந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், திருச்சி மாநகரில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பல இடங்களில் சோதனையின்போது கண்டக்டர்களை தரக்குறைவாக பேசி வருகிறார். மேலும் பயணிகளை மிரட்டி அபராதம் வசூல் செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பஸ்களை இயக்குவோம் என்றனர்.

பேச்சுவார்த்தை

மேலும் அங்கு வந்த போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளிடமும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு திரும்பினர். இந்த சம்பவத்தால் நேற்று மதியம் 12.30 மணிக்கு மேல் பணிமனையில் இருந்து வெளியே செல்லக்கூடிய பஸ்கள் இயக்கப்படவில்லை. டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணிக்கு திரும்பிய பின் சுமார் அரை மணி நேரம் தாமதமாக பஸ்கள் வெளியே சென்றன. டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களின் போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com