

ஈரோடு
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் இருந்து ஈரோடு பஸ் நிலையம் நோக்கி நேற்று முன்தினம் அரசு டவுன் பஸ் ஒன்று வந்துகொண்டு இருந்தது. அந்த பஸ் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அருகில் சத்திரோட்டில் வந்தபோது மர்மநபர்கள் பஸ்சின் மீது கல் வீசி தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதேபோல் மேட்டூரில் இருந்து பவானி, ஈரோடு வழியாக கோவைக்கு செல்லும் அரசு பஸ் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பவானி ரோட்டில் வந்தபோது மர்மநபர்கள் கல்வீசி தாக்கினார்கள்.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் மற்றும் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த 2 பஸ்களின் மீது கல்வீசி தாக்கியவர்கள் ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரவீதியை சேர்ந்த தர்மலிங்கத்தின் மகன் தமிழ்செல்வன் (வயது 24), கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் வீதியை சேர்ந்த வடிவேல் (32) ஆகியோர் என்பதும், சுமை தூக்கும் தொழிலாளர்களான இவர்கள் வன்னியர் சங்க தலைவர் ஜெ.குருவின் மறைவையொட்டி கல்வீசி தாக்கியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் வீரப்பன்சத்திரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதேபோல் ஈரோட்டில் இருந்து அந்தியூர் நோக்கி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் கல்வீசி கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கல்வீசியதாக செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்த நவநீதன் (29) என்பவரை கைது செய்தனர்.