குமரியில் 1-ந் தேதி அரசு விழா: பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சரும் பங்கேற்கிறார் - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

குமரியில் வருகிற 1-ந் தேதி நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கிறார் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குமரியில் 1-ந் தேதி அரசு விழா: பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சரும் பங்கேற்கிறார் - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
Published on

தென்தாமரைகுளம்,

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 1-ந் தேதி குமரிக்கு வருகை தருகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அடிக்கடி ஆய்வு செய்து வந்தார். இந்தநிலையில் அவர் நேற்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் அழகேசன் மற்றும் பலருடன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 1-ந் தேதி இங்குள்ள மேடையில் பேசுகிறார். மத்திய அரசின் சில பணிகளை தொடங்கி வைக்கிறார். சில பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும், பல புதிய திட்டங்களை அறிவிக்கவும் இருக்கிறார். அரசு விழாவும், அரசியல் நிகழ்ச்சியும் தனித்தனியாக இரண்டு மேடைகளில் நடைபெறுகிறது.

இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். வைகோ மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர். நல்ல திட்டங்களை தொடங்கி வைத்து குமரி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக வருகின்ற பிரதமருக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க வேண்டாம் என்று அவர்களிடம் ஏற்கனவே கேட்டு கொண்டுள்ளேன். இதனால் எதிர்ப்பு காட்ட மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். நமது நாடு தற்போது முன்னேறியுள்ளது. அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் நம்மை உற்று பார்க்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் எங்களுடன் தே.மு.தி.க. கண்டிப்பாக வரும், வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com