அரசு நிலம் ஆக்கிரமிப்பு, 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை - நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு

அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த வழக்கில் 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
அரசு நிலம் ஆக்கிரமிப்பு, 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை - நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள திருமலைப்பட்டியை சேர்ந்தவர் இதயத்துல்லா (வயது 48). விவசாயி. இதே பகுதியை சேர்ந்தவர் பஷீர் அகமத் (34). இவர் அங்கு பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டதாக திருமலைப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந் தேதி புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட இதயத்துல்லா, பஷீர் அகமத் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளவழகன் தீர்ப்பு கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com