

பேட்டை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழா வருகிற 22-ந்தேதி(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அன்று மதியம் 1.30 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சி. கலையரங்கில் இந்த விழா நடைபெறுகிறது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழாவில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வாழ்த்தி பேசுகிறார். ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.வெங்கட்ராமன் பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.
பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி, பதிவாளர் சந்தோஷ்பாபு மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். எத்தனை மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது என்ற பட்டியலும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.