இலவச அரிசி வழங்காததை கண்டித்து கவர்னர் உருவபொம்மை எரிப்பு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது

ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்காததை கண்டித்து கவர்னர் கிரண்பெடி உருவ பொம்மையை எரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இலவச அரிசி வழங்காததை கண்டித்து கவர்னர் உருவபொம்மை எரிப்பு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது
Published on

காரைக்கால்,

ரேஷன் கார்டுதாரர்களுக்கு புதுச்சேரி அரசு வழங்கும் மாதாந்திர இலவச அரிசியை உடனே வழங்க வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஊர்வலமாக சென்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். காரைக்கால் மதகடியில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் வணங்காமுடி தலைமை தாங்கினார்.

துணை செயலாளர் செந்தமிழ்செல்வன், தொகுதி செயலாளர்கள் தமிழரசி, வல்லவன், விடுதலைக்கனல், செல்வம், கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 40 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

ஊர்வலம் காரைக்கால் நேரு வீதி வழியாக கலெக்டர் அலுவலகம் வந்தது. பின்னர் கலெக்டரை சந்திக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அலுவலகத்துக்குள் சென்றனர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள், கலெக்டர் இங்கு இல்லை என்று தெரிவித்தனர்.

இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தின் முன்பு திரண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இலவச அரிசி வழங்குவதற்கு முட்டுக்கட்டையாக கவர்னர் கிரண்பெடி இருப்பதாக கூறி கண்டன கோஷமிட்டனர். அப்போது சிலர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கவர்னர் கிரண்பெடியின் உருவ பொம்மையை தீ வைத்து எரிந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காரைக்கால் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநில செயலாளர் வணங்காமுடி, துணை செயலாளர் செந்தமிழ்செல்வன் உள்பட 15 பேரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com