கிராமசபை கூட்டம்: எரியாத தெரு விளக்குகளை பாடை கட்டி தூக்கி வந்த பொதுமக்கள்

தெரு விளக்குகளை எரியவைக்க நடவடிக்கை எடுக்காததால் பெருமாநல்லூர் கிராம சபை கூட்டத்திற்கு தெருவிளக்குகளை பாடை கட்டி பொதுமக்கள் தூக்கி வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கிராமசபை கூட்டம்: எரியாத தெரு விளக்குகளை பாடை கட்டி தூக்கி வந்த பொதுமக்கள்
Published on

பெருமாநல்லூர்,

காந்தி ஜெயந்தியையொட்டி திருப்பூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள 10 ஊராட்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் மற்றும் மனோகரன் மேற்பார்வையில் கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி பெருமாநல்லூர் ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் டாஸ்மாக் இல்லாத ஊராட்சியாக மாற்றுதல், தூய்மையான ஊராட்சியாக மாற்றுதல், சுத்திகரிக்கப்படாமல் குளங்களில் சாய நீரை கலக்கும் ஆலைகளை மூடுதல், நால்ரோடு பகுதியில் பொது கழிப்பிடம் அமைத்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக பெருமாநல்லூர் ஊராட்சி பகுதியில் தெருவிளக்குகள் எரியாததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மகேந்திரன் தலைமையில் பொதுமக்கள் எரியாத தெருவிளக்குகளை பாடையில் வைத்து கிராமசபை கூட்டத்திற்கு தூக்கி வந்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எரியாத தெரு விளக்குகளை எரிய வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமசபை கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

அத்திக்கடவு- அவினாசி திட்டம்

தொரவலூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் இதுவரை டாஸ்மாக் கடை இல்லாத இந்த ஊராட்சியில் இதே நிலைமை நீடிக்க வேண்டும் என்றும், தூய்மையான ஊராட்சியாக பராமரித்தல், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோல் பொங்குபாளையம், காளிபாளையம், ஈட்டிவீரம்பாளையம், கணக்கம்பாளையம், வள்ளிபுரம், சொக்கனூர் ஆகிய ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் செல்வராஜ், ஜோஸ்வின், செந்தில்குமாரி, விஜயகுமார், யசோதா மற்றும் அந்தந்த ஊராட்சி செயலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com