தானேயில் பயங்கர விபத்து கன்டெய்னர் லாரி ஏறி தாய், மகள் பலி

பள்ளத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தாய், மகள் மீது கன்டெய்னர் லாரி ஏறியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
தானேயில் பயங்கர விபத்து கன்டெய்னர் லாரி ஏறி தாய், மகள் பலி
Published on

தானே,

தானேயை சேர்ந்தவர் திலீப் (வயது33). இவரது மனைவி சந்திரவதி (31). இவர்களுக்கு பிரான்சல் (3) என்ற மகள் இருந்தாள். திலீப் நேற்று முன்தினம் மிராரோட்டில் வசிக்கும் பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த மனைவி, மகளை அழைத்து கொண்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

மோட்டார் சைக்கிள் கோட்பந்தர் சாலை பயந்தர்பாடா அருகே வந்தபோது சாலை ஓரமாக தண்ணீர் தேங்கி கிடந்த இடத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். அப்போது பள்ளம் கிடப்பது தெரியாமல் போனதால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. மேலும் அதிலிருந்த 3 பேரும் சாலையில் விழுந்தனர்.

அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த கன்டெய்னர் லாரி, துரதிருஷ்டவசமாக சாலையில் விழுந்து கிடந்த பிரான்சல் மற்றும் சந்திரவதி மீது ஏறியது. மேலும் சிறிது தூரம் டயரோடு இழுத்து சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே தாயும், மகளும் உடல் நசுங்கி பலியாகினர். இந்த விபத்தில் திலீப் தலையில் பலத்த காயமடைந்தார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே திலீப்பை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த காசர்வட்வலி போலீசார் அங்கு சென்று சாலையில் கிடந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி டிரைவர் சந்திரசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com