துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் : பா.ஜனதா பிரமுகர் கைது

டோம்பிவிலியில், கடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பா.ஜனதா பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் : பா.ஜனதா பிரமுகர் கைது
Published on

தானே,

தானே டோம்பிவிலியை சேர்ந்தவர் தனஞ்செய் குல்கர்னி (வயது49). இவர் பா.ஜனதா சார்பில் டோம்பிவிலி தாலுகா துணைத்தலைவராக இருந்து வருகிறார். மான்பாடா ரோடு திலக்நகர் திப்திஜோத் சொசைட்டி என்ற கட்டிடத்தில் இவருக்கு சொந்தமான கடை உள்ளது.

இந்தநிலையில், இவரது கடையில் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக கல்யாண் குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று அங்கு சென்ற போலீசார், அவரது கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் ஒரு ஏர்கன் வகை துப்பாக்கி, 10 வாள்கள், 25 அரிவாள்கள், கோடரிகள், பட்டாகத்திகள் உள்பட ஏராளமான பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் ஆகும்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தனஞ்செய் குல்கர்னியை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரை கல்யாண் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

பா.ஜனதா பிரமுகர் கடையில் ஏராளமான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com