கும்மிடிப்பூண்டியில் கைவரிசை: அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

கும்மிடிப்பூண்டி அருகே அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியில் கைவரிசை: அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு
Published on

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காடு பகுதியில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணி (வயது 27) என்பவருக்கு சொந்தமான வாகன உதிரி பாகம் மற்றும் எலக்ட்ரீக்கல் கடையும், குருதானமேடு கிராமத்தை சேர்ந்த செல்வம் (37) என்பவருக்கு சொந்தமான டீக்கடையும், அப்பாவரத்தை சேர்ந்த கோபி (34) என்பவருக்கு சொந்தமான பஞ்சர் கடையும், மேட்டுத்தெருவை சேர்ந்த குசேலன் (44) என்பவருக்கு சொந்தமான வெல்டிங் கடையும் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் 4 கடைகளின் இரும்பு கதவுகளின் பூட்டுகளை உடைத்து கடைகளுக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர்.

பொருட்கள் கொள்ளை

அங்கிருந்த தாமிர கேபிள் பண்டல்கள், பணம், சிகரெட் பாக்கெட்டுகள், பாய்லர், வெல்டிங் பொருட்கள் என 4 கடைகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை அள்ளி சென்றனர்.

அதைத்தொடர்ந்து, அப்பகுதியில் டயர் கடையில் இருந்த 2 கண்காணிப்பு கேமராக்களையும் மர்மநபர்கள் திருடிச்சென்றனர். மேலும் திருடி சென்ற தாமிர கேபிள் பண்டல்களை அப்பகுதியில் சாலையோரம் தீயிட்டு கொளுத்தி அதன் வயர்களை மட்டும் தனியே பிரித்து எடுத்து சென்று உள்ளனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com