பீதர் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய புதுப்பெண் கொலையா?- கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை

பீதர் அருகே புதுப்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் வரதட்சணை கொடுமைப்படுத்தி கொலை செய்யப்பட்டாரா என கணவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பீதர் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய புதுப்பெண் கொலையா?- கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை
Published on

பீதர்,

பீதர் மாவட்டம் ரெகுலகி கிராமத்தை சேர்ந்தவர் உமரா பேகம் (வயது 25). இவருக்கும் பீதர் மாவட்டம் சிட்டகுப்பா தாலுகா நிர்ணா கிராமத்தை சேர்ந்த மஸ்தானுக்கும் கடந்த ஆண்டு (2020) ஜூலை 13-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணமாகி 6 மாதங்கள் ஆன நிலையில் மஸ்தானும், அவரது குடும்பத்தினரும் உமராபேகத்திடம் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் தனது பெற்றோரிடம் இருந்து வரதட்சணை வாங்கி வர மறுத்துள்ளார். இதனால் வரதட்சணை வாங்கி வரும்படி, மஸ்தானும், அவரது குடும்பத்தினரும் உமராபேகத்தை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உமராபேகம் தனது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கணவர் மஸ்தான் கூறினார். சம்பவம் பற்றி கேள்விபட்டதும் உமராபேகத்தின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் உமராபேகத்தின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சிட்டகுப்பா போலீசார் விரைந்து சென்று, உமராபேகத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிட்டகுப்பா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து உமாரபேகத்தின் பெற்றோர், போலீசில் ஒரு புகார் அளித்துள்ளனர்.

அதில், தங்களது மகளை வரதட்சணை கொடுமை செய்து வந்ததாகவும், வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் உமராபேகத்தை அவரது கணவரும், குடும்பத்தினரும் சேர்ந்து அடித்துக்கொலை செய்துவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடுவதாகவும், எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு நாகேஷ் கூறுகையில், புதுப்பெண் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது கணவர் மஸ்தானை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உமராபேகம் தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என்றார்.

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தூக்கில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com