

கொப்பல்,
கொப்பல் மாவட்டம் குலதள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நிர்மலா (வயது 24). இவருக்கு திருமணமாகி விட்டது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிர்மலாவுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே நிர்மலாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்காக அவர், கொப்பல் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு நிர்மலாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நிர்மலா பரிதாபமாக இறந்து விட்டார்.
இதன் காரணமாக பிறந்து 20 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தாய் இல்லாமல் பரிதவித்து வருகிறது. இந்த சம்பவம் குலதள்ளி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.