2-வது திருமணம் செய்த நிலையில் அழகு நிலைய உரிமையாளர் தூக்குப்போட்டு சாவு

2-வது திருமணம் செய்த நிலையில் அழகு நிலைய உரிமையாளர் தூக்குப்போட்டு செத்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
2-வது திருமணம் செய்த நிலையில் அழகு நிலைய உரிமையாளர் தூக்குப்போட்டு சாவு
Published on

புதுச்சேரி,

புதுவை ஆனந்தாநகர் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 59). இவரது மகன் உதயன் (30). அழகுநிலையம் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு கடந்த 2011-ம் ஆண்டு சிவசங்கரி என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அழகுநிலையத்தில் வேலைபார்க்க வந்த முதலியார்பேட்டையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்து சென்றார்.

இதைத்தொடர்ந்து தொடர்பில் இருந்த பெண்ணை உதயன் கடந்த 4 மாதங்களுக்கு முன் 2-வது திருமணம் செய்து கொண்டு முத்தியால்பேட்டை செந்தாமரை நகரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இந்தநிலையில் முதல் மனைவியுடன் தொடர்பில் இருப்பதாக 2-வது மனைவி சந்தேகமடைந்து உதயனுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த உதயனுக்கும், 2-வது மனைவிக்கும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து தனது அறைக்குள் சென்ற உதயன் தூக்குப்போட்டு தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

ஆனால் அவரை பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள் ஏற்கனவே உதயன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக உதயனின் தந்தை நடராஜன் முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com