கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை: தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை: தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
Published on

கடலூர்,

கடலூர் நகரில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் விடிய, விடிய மழை பெய்தது. விடிந்த பிறகும் நேற்று காலை 9 மணி வரை மழை பெய்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளான திருமலைநகர், நேரு நகர், பெரியசாமி நகரில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. அப்பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் மின்மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றினார்கள்.

நகரில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகிறார்கள். கடந்த ஆண்டு பெய்த மழையில் ஆனைக்குப்பம் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் தண்ணீர் தேங்கியதால் சாலையை வெட்டி தண்ணீரை வடிய வைத்தனர். அந்த சாலை சீரமைக்கப்படவில்லை.

இந்தநிலையில் தற்போது பெய்த மழையால் அந்த சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி, குட்டி குளம் போல உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகிறார்கள்.

இதேபோல் இம்பீரியல் சாலையில் இருந்து ரெயில்வே மேம்பாலத்துக்கு செல்லும் சாலையும் பெயர்ந்து பெரிய, பெரிய பள்ளங்களாக உள்ளது. அதில் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகிறார்கள்.

கடலூர் நேதாஜி சாலையின் இருபுறமும் பள்ளமாக இருக்கிறது. அதில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்களில் செல்பவர்கள் திணறும் நிலை காணப்படுகிறது.

பண்ருட்டியில் நேற்று காலை பெய்த பலத்த மழையின் காரணமாக நான்குமுனை சந்திப்பில் கும்பகோணம்-சென்னை சாலையில் 1 அடி உயரத்துக்கும், ராஜாஜி சாலையில் 2 அடி உயரத்துக்கும் தண்ணீர் தேங்கியிருந்தது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பண்ருட்டி பகுதியில் பெய்த மழையால் நடுக்குப்பம் வெள்ளவாரி ஓடையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஓடையை ஒட்டி நடுக்குப்பம் காலனிக்கு செல்லும் சாலையில் தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால் சாலையில் நடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டதோடு, சாலையில் ஓடிய தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

இதேபோல் பலத்த மழையால் விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்ததால் மக்கள் சிரமப்பட்டனர். கம்மாபுரம் பகுதியில் பெய்த மழையால் பூண்டியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்துக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மாணவ-மாணவிகள் பெரும் சிரமமடைந்தனர்.

நேற்று மாலை பெய்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பெண்ணாடம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சரவணன் என்பவரது கூரை வீட்டின் சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது. இதனால் வீட்டில் இருந்த சரவணன் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 78 மி.மீ. மழை பெய்தது.

இதர பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மி.மீட்டரில் வருமாறு:-

வடக்குத்து -69, கடலூர் -59.20, கடலூர் கலெக்டர் அலுவலகம் -49.70, குறிஞ்சிப்பாடி -39, சிதம்பரம்-30.10, கொத்தவாச்சேரி-29, அண்ணாமலை நகர்-27, குடிதாங்கி-26, வானமாதேவி-24.20, புவனகிரி-22, பண்ருட்டி -16.40, மே.மாத்தூர்-15, சேத்தியாத்தோப்பு-12, காட்டுமன்னார்கோவில்-9, லால்பேட்டை-8, ஸ்ரீமுஷ்ணம்-7.10, பெலாந்துறை -6, குப்பநத்தம்-4, தொழுதூர்-4, விருத்தாசலம் -3.20, வேப்பூர்-3, காட்டுமயிலூர்-2.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com