திருவாரூரில் பலத்த மழை: கோவிலில் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி

திருவாரூரில் பெய்த பலத்த மழையால் கோவிலில் மழைநீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
திருவாரூரில் பலத்த மழை: கோவிலில் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி பலத்த மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. நேற்று காலையிலும் மழை பரவலாக பெய்ததால் மாணவ-மாணவிகள் நலன் கருதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஆனந்த் உத்தரவிட்டார்.

தொடர்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக திருவாரூர் விஜயபுரத்தில் இருந்து வாளவாய்க்கால் புறவழிச்சாலையை இணைக்கும் ரெயில்வே கீழ்பாலத்தில் மழைநீர் நிரம்பியதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர்.

இதேபோல மடப்புரத்தில் உள்ள வேணுகோபாலசாமி பெருமாள் கோவிலில் மழைநீர் புகுந்தது. இதனால் கோவில் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதனால் பக்தர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். மழையினால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

நன்னிலம்-59.2, திருவாரூர்-58.4, மன்னார்குடி-38, திருத்துறைப்பூண்டி-36, பாண்டவையாறு தலைப்பு-30.8., நீடாமங்கலம்-26, வலங்கைமான்-21.2, குடவாசல்-19.8, முத்துப்பேட்டை-9.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com