சிவமொக்காவில் விடிய, விடிய பலத்த மழை - மாஸ்திகட்டேயில் 104 மி.மீ. மழை பதிவு

சிவமொக்காவில் விடிய, விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் அதிகபட்சமாக மாஸ்திகட்டே பகுதியில் 104மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சிவமொக்காவில் விடிய, விடிய பலத்த மழை - மாஸ்திகட்டேயில் 104 மி.மீ. மழை பதிவு
Published on

சிவமொக்கா,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மலைநாடு என்று அழைக்கப்படும் சிவமொக்கா மாவட்டத்தில் மழை பெய்யாமல் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் மாலை திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. சூறக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. மாவட்டத்தில் ஒசநகர், தீர்த்தஹள்ளி தாலுகாக்களில் அதிகளவு மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் மாலை பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இந்த மழையால் மாவட்டத்தில் பல பகுதிகளில் சாலையில் மழைநீர் வெள்ளம்போல கரைபுரண்டு ஓடியது.

சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஏராளமான கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இரவில் அவர்கள் இருளில் தவித்தனர்.

நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் ஒசநகர் தாலுகாவில் மாஸ்திகட்டே பகுதியில் 104 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஹூலிகல் 100 மி.மீ., மாணி 86 மி.மீ., யடூரில் 74 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

சிவமொக்காவில் மழை பெய்ய தொடங்கி உள்ளதால், நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மலைநாட்டின் நுழைவாயில் எனப்படும் சிவமொக்கா நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.

மழையால் ஏற்படும் சேதங்களை தடுப்பதற்காக சிவமொக்கா நகரில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு, பகலாக வைல பார்த்து வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பிலும் முன்னச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com