தேன்கனிக்கோட்டையில் சூறைக்காற்றுடன் கனமழை - வீடுகள், மின்கம்பங்கள் சேதம்

தேன்கனிக்கோட்டையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு வீடுகள், மின்கம்பங்கள், வாழை மரங்கள் சேதமடைந்தன.
தேன்கனிக்கோட்டையில் சூறைக்காற்றுடன் கனமழை - வீடுகள், மின்கம்பங்கள் சேதம்
Published on

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் நேற்று முன்தினம் மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவில் சூறைக்காற்று வீசியது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல தேங்கி நின்றது.

இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் சிலர் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். சூறைக்காற்றுக்கு தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சில வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன.

மேலும் 25 மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. இதன் காரணமாக சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களும் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை பெய்தது. மீண்டும் நேற்று அதிகாலை 4 மணியளவில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com