

மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நேற்று பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டது. கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலைகள் சீறி எழும்பி வந்தன. அப்போது கரையில் நிறுத்தி வைத்திருந்த ஒரு படகு ராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டது. உடனே அங்கு இருந்த மீனவர்கள் மற்றொரு படகில் சென்று கடலில் அடித்துச் செல்லப்பட்ட அந்த படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த மீன்பிடி வலைகள் சேதம் அடைந்தன.
ராட்சத அலையால் கடல் நீர் முன்னோக்கி வந்ததால் அங்குள்ள கடற்கரை உணவகம், குடியிருப்பு பகுதிகள் வரை கடல் நீரால் சூழப்பட்டு குளம் போல் காட்சி அளித்தது.
கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த மீன்பிடி வலைகள், துடுப்பு, மீன்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் டிரம் போன்ற மின்பிடி சாதனங்களை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று பத்திரப்படுத்தினர். அதேபோல் படகுகளையும், கடற்கரையில் இருந்து 20 மீட்டர் தூரம் வரையிலான மணற்பகுதி உள்ள இடத்திற்கு கொண்டு சென்று பாதுகாத்தனர்.
கடல் சீற்றம் காரணமாக நேற்று பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் சீற்றத்தால் மணற்பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டதால் நேற்று காலை நேரத்தில் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். சிலர் நடைபயிற்சி மேற்கொள்ளும் முயற்சியை கைவிட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.
அடிக்கடி கடல் சீற்றம் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கரைப்பகுதியில் படகு, வலை, போன்ற மீன்பிடி சாதனங்களை பாதுகாக்க முடியவில்லை என கவலை தெரிவிக்கும் மீனவர்கள், தூண்டில் வளைவு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.