பழனியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

பழனியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
பழனியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
Published on

பழனி:

பழனி நகர போக்குவரத்து போலீஸ் சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. சிவகிரிபட்டி பைபாஸ் பிரிவில் நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். துணை சூப்பிரண்டு சத்தியராஜ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம், சாலை விதிகளை பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் போலீஸ் சூப்பிரண்டு கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலத்தில் போலீசார், பொதுமக்கள் என ஏராளமானோர் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்றனர். ஊர்வலமானது சிவகிரிப்பட்டி பைபாஸ் பிரிவில் தொடங்கி காலேஜ் ரோடு, திண்டுக்கல் ரோடு, புதுதாராபுரம் ரோடு, ஆர்.எப்.ரோடு என நகரின் முக்கிய பகுதிகள் வழியே சென்றது.

முன்னதாக செம்பட்டி பஸ் நிலையத்தில் குற்ற செயல்கள் நடப்பதை தவிர்க்கும் வகையில் 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதேபோல் செம்பட்டி ரவுண்டானா, காமுபிள்ளைசத்திரம், வீரக்கல் பிரிவு, ஆதிலட்சுமிபுரம், ஆத்தூர் பிரிவு, சித்தையன்கோட்டை பிரிவு ஆகிய இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கலந்துகொண்டு, கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதில் ஒட்டன்சத்திரம் போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com